யூரியூப் பக்கம் ஒன்றிற்காக கொள்ளையடிப்பதை போன்ற ' ப்ராங்க்' எனப்படும் குறும்பு காணொளி எடுக்க முயன்ற இளைஞன் மற்றொரு இளைஞரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
கொள்ளையர்கள் போன்று நடித்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் காணொளியை பதிவு செய்தபோது உண்மையிலேயே இவரைக் கொள்ளையன் என நினைத்த 23 வயது இளைஞன் தற்பாதுகாப்புக்காக வைத்திருந்த தனது துப்பாக்கியால் இந்த இளைஞனைச் சுட்டார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நாஷ்வில் என்ற நகரத்திலுள்ள பூங்கா ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
டிமோத்தி வில்க்ஸ் என்ற 20 வயது இளைஞனே விளையாட்டு விபரீதமானதில் சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.
டிமோத்தி வில்க்ஸூம் அவரது நண்பரும் பெரிய கத்திகளை கையில் ஏந்தியவாறு கொள்ளையர்கள் போல் வேடமிட்டு பூங்காவுக்குள் திடீரென நுழைந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்போதே இவர்கள் உண்மையான கொள்ளையர்கள் என நினைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
டிமோத்தி வில்க்ஸ் மரணம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
கொள்ளையபடிப்பதை போன்ற குறும்பு காணொளிகள், குறிப்பாக சில நேரங்களில் போலியான துப்பாக்கிகள், முகமூடிகள் ஆகியவற்றை கொண்டும் வாகனத்தை திருடுவதை போன்றும் வேடிக்கை காணொளிகளை எடுப்பது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பிரபலமாக உள்ளது.
ஆனால், குறும்பு என்ற பெயரில் அபாயகரமான அல்லது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காணொளிகளை பதிவேற்றுவதை தடுக்கும் வகையில் இரண்டாண்டுகளுக்கு முன்பே யூரியூப் நிறுவனம் விதிமுறைகளை கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.